தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டு ஆவணம் கையளிப்பு.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிப்பதற்காகத் தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மற்றும் எம்.ஏ. சுமந்திரன் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்), குருசுவாமி சுரேந்திரன் (ரெலோவின் ஊடகப் பேச்சாளர்) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.