கோட்டாவின் மனம் மாறினால்தான் பிரச்சினைகள் தீரும்! சபையில் சிறிதரன் சுட்டிக்காட்டு.

“தான் இன்னமும் இராணுவ சிந்தனை வாதத்துக்குள்தான் இருக்கிறார் என்பதையும், நீதியான, நியாயமான வழியில் செல்வதற்கு தயாரில்லை என்பதையுமே கொள்கை விளக்க உரைமூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2019 நவம்பர் 18 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது ஜனாதிபதி உரையாற்றியிருந்தார். அதன்பின்னர் 2019 நவம்பர் 30 ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்று திரும்பும்வேளை இந்து நாளிதழுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவ கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றினார். 2022 ஜனவரி 18ஆம் திகதி 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.

அன்று முதல் இன்றுவரை அவரின் உரைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்தோம். இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்றனர் என்பதையும், தமிழர்கள் என்கிற தேசிய இனத்தின் அடிப்படை அபிலாஷைகளையும் அவர் தூக்கி கடாசிவிடும் வகையிலேயே செயற்பட்டுள்ளார். குறிப்பாக தன்னுடைய மனதில்கூட அதனை சொல்ல முடியாத தலைவராகவே அவர் இருக்கின்றார்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியின் உரையொன்பது, அனைவரையும் அரவணைத்து, ஒன்றிணைக்கும் வகையில் அமைய வேண்டும். ஆனால், ஒரு தலைவனின் உரையாக ஜனாதிபதியின் உரை அமையவில்லை. தன்னுடைய இராணுவ சிந்தனை வாதத்துக்குள், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைக்குள் மட்டும்தான் தன்னுடைய சிந்தனை இருப்பதாகவே அவரது பேச்சு அமைந்துள்ளது.

அதாவது நீதியான – நியாயமான வழியில் செல்வதைற்கு தயாரில்லை என்பதைத்தான் அவரது உரை குறிப்பிடுகின்றது. இந்நாடு சீரான பாதையில் நேர்த்தியாக செல்ல வேண்டுமானால், இனப்பிரச்சினை தீரவேண்டுமானால் தன்னுடைய மனதை ஜனாதிபதி முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாட்டின் இறைமையும், மக்களின் வாழ்க்கையும் பொருளாதாரமும் மேம்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.