நாட்டை மீண்டும் முடக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சி! – அரசு தெரிவிப்பு.

“நாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.”

இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 25 கட்டில்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனைச் சமாளிக்கக்கூடிய வளம் உள்ளது. பழைய நடைமுறை பின்பற்றப்படும். அத்துடன், வைத்தியசாலைகளில் போதுமானளவு ‘ஒட்சிசன்’ உள்ளது. எனவே, வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை மற்றும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகும் தகவல்கள போலியானவை.

நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்க முடியாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருக்கப் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏற்கனவே நாடு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்கள் இன்னும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.