பெண்களை குறிவைத்து கொள்ளை.. துப்பாக்கியுடன் வட இந்திய கொள்ளையர்கள் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வட மாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு கைதுப்பாக்கி, 5 தோட்டா, 11 பவுன் தங்க நகை, மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி இரயில்வே கேட் அருகில் வசித்து வருபவர் சண்முகம். இவரது மனைவி சாந்தா. இவர் வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் சாந்தா கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழா கொடியேற்ற நிகழ்ச்சிக்கு செல்வதற்காக முத்தம்பட்டி இரயில்வே கேட் அருகே பேருந்து நிறுத்தத்தில் காலையில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 27 வயது மிக்கதக்க இரண்டு வாலிபர்கள் சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடினர். இதேபோல், ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியகிருஷ்ணாபுரம் ஆத்தூர் – சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்த மோகன்குமார் – மோகனா தம்பதியிடம் இருந்து தங்க செயினையும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

தொடர் வழிப்பறி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இருவரும் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வாழப்பாடி அருகே சேஷன்சாவடி சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் இந்தியில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர், பின்னர் அவர்களை சோதனை செய்ததில் ஒரு நாட்டு கைத்துப்பாக்கியும் 5 தோட்டாக்களும் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் இவர்கள் இருவரும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புஸ்பேத்திரபிங்கி [ வயது 22] , சதாம்ராஜா [ வயது 32] என்பதும் தெரியவந்தது.

இவர்கள் வாழப்பாடி பகுதியில் துப்பாக்கியுடன் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட இருசக்கர வாகனத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருடி வந்ததும் தெரிய வந்தது. மேலும் இரண்டு நாட்டு கைத்துப்பாக்கியுடன் வந்தவர்கள் ஒரு துப்பாக்கியை கை செலவிற்காக வரும் வழியில் விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து வட மாநில வாலிபர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 11 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமம் இன்றி நாட்டு கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இவர்கள் யாராவது முக்கிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை சுட்டு கொல்வதற்காக இப்பகுதியில் நோட்டமிட்டார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.