மருத்துவர் பிரியந்தினிக்கு கொலை அச்சுறுத்தல்கள் ஏற்பட காரணம் என்ன?

கிளிநொச்சியில் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் , 71 மாணவர்களைக் காப்பாற்றிய காரணத்தினாலேயே கண்டாவளை வைத்தியசாலை மருத்துவ அதிகாரியான மருத்துவர் பிரியந்தினிக்கு கொலை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

கிளிநொச்சி – தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தமை தொடர்பில் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி விவகாரம், தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராஜா ஜீவாநந்தம் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மருத்துவரான, கண்டாவளை வைத்தியசாலை மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரியந்தினிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைது செய்யப் பட்டுள்ளதுடன், சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனை மேற்கொண்ட தனியார்கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 1% மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து , அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களது மருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கண்டாவளை மருத்துவ அதிகாரி பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இப்போது அங்கு மருத்துவ அதிகாரியாக பணிக்கு வந்துள்ள மருத்துவர் பிரியந்தினி கமலசிங்கம். அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களையும், ஒத்துழைப்பின்மையையும் பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, கண்ணில் குறைபாடு உள்ளது. அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என , ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்தவர்களை இனம்காட்டி, அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவர் பிரியந்தினி கமலசிங்கத்துக்கு தொலைபேசியில் சிலர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வைத்தியர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் மருத்துவரை தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேக நபரை விளக் கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Leave A Reply

Your email address will not be published.