கிழக்கில் ஹக்கீம், ரிஷாத் கட்சிகளுடன் சஜித் அணி இனிமேல் கூட்டணி இல்லை.

எந்தவொரு தேர்தலாயினும் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடும் என்று கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி விட்ட தவறுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செய்யமாட்டாது. நாட்டிலுள்ள 160 தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தந்தத் தொகுதி அமைப்பாளர்களே பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவர்.

கட்சி சம்பந்தப்பட்ட எந்த வேலைத்திட்டமாயினும் அமைப்பாளர் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எம்முடன் இணைந்து எமது வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு, எமது ஆதரவாளர்களினதும் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் அரசில் இணைந்து விடுகின்றனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் எமது கட்சியின் பலம் மலினப்படுத்தப்படுகின்றது. மாற்றுக் கட்சியினருக்கு வாய்ப்பளிப்பதால் எமது கட்சி ஆதரவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் இவ்வாறான தவறுகள் நடக்க இடமளிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கின்றேன். இந்த விடயத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மிகவும் உறுதியாக இருக்கின்றார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.