இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்; இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

100வது போட்டியில் விளையாடிய விராட் கோலி 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 4 ரன்களில் சதம் தவற விட்டார். அவர் 96 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. அதில் அஸ்வின் 61 ரன்களில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது.

இதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. அந்த அணியில் நிசாங்கா அரை சதம் (61) எடுத்துள்ளார். அவரை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களிலும், சிலர் 30 ரன்களுக்குள்ளும் சுருண்டனர். இதனால், இலங்கை அணி 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது.

இதனால், 400 ரன்கள் பின்தங்கி இருந்த இலங்கை 2வது இன்னிங்சை விளையாடியது. இந்த போட்டியின் தேநீர் இடைவேளையில் இலங்கை 35 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. அசலன்கா (20), மேத்யூஸ் (28) ரன்கள், லக்மல் (0) எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய நிரோஷான் டிக்வெல்லா அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் இலங்கை அணி 178 ரங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினர். ஷமி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இறுதியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.