பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி; ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்.

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது.

டேவிட் வார்னர் 68 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 97 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். லபுஸ்சேன் 69 ரன்னுடனும், ஸ்டீவன் சுமித் 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்க இருந்த நிலையில், அதிகாலையில் பெய்த மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானத்தில் ஈரத்தன்மை அதிக இருந்ததால், மைதானத்தை உலரச்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து 3 மணி நேர காலதாமதத்திற்கு பின்னர் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய லபுஸ்சேன் 90 ரன்களிலும், ஸ்டீவன் சுமித் 78 ரங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 48 ரன்கள் குவித்தார். 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 449 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டார்க் 12 ரன்களுடனும் கேப்டன் கம்மின்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை விட 27 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி நிறைவடைய மேலும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டி டிராவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.