ஜெய்சங்கர் – கூட்டமைப்பு நாளை கொழும்பில் முக்கிய சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை காலை கொழும்பு வருகின்றார்.

கொழும்பு விஜயத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நாளை மாலை 4.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசவுள்ளது எனச் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.