காட்டுமிராண்டித்தனமான அரசை வேரோடு பிடுங்கி வீச வேண்டும்! சஜித் சூளுரை.

“ராஜபக்ச அரசு நாட்டுக்கு ஒரு கெடுவினையாகும். காட்டுமிராண்டித்தனமான இந்த அரசை மக்களின் ஆணையுடன் வேரோடு பிடுங்கி வீச வேண்டும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசுக்கு எதிராகச் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய இந்த அரசை ஒருகணமேனும் ஆட்சியில் தக்க வைக்க இந்நாட்டு மக்கள் தயாராக இல்லை.

இந்த அரசு ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவின் பெயரால் தூக்கியெறியப்படும். நாம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாக உறுதியாக முன் நிற்கின்றோம்.

இந்த அரசு நாட்டு மக்களை மயானத்தின் பக்கம் தள்ளிக்கொண்டிருக்கின்றது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான அரசை முற்றிலுமாக வீழ்த்தி தூக்கி எறிய வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.