ஜனாதிபதி இல்லத்திற்கு அருகே எதிர்ப்பு தெரிவிக்க மின் கம்பத்தில் ஏறியவர் பலி

சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் எதிரிசிங்க மாவத்தையில் உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மிரிஹான எதிரிசிங்க வீதி 1ஆம் தடத்தில் வசிக்கும் நாணயக்கார போபே ருவன் வீரதுங்க வயது 53 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மஹரகம நுகேகொட வீதியில் எதிரிசிங்க மாவத்தை நுழைவாயிலில் உள்ள மின்மாற்றியுடன் கூடிய உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தை அவரது மகன் நேரில் பார்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.