சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலன் கருதிச் செயற்படுக அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து.

“நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழக முதலமைச்சரின் இந்த நல்ல முயற்சியை வரவேற்கின்றோம். அதேபோல் இந்திய மத்திய அரசும் இக்கட்டான நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவவேண்டும். முழு அளவிலான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கவேண்டும்.

அதேவேளை, இந்திய அரசின் வேண்டுகோள்கள் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டும். நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழகத்தினதும், இந்தியாவினதும் முழுமையான பங்களிப்பு தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும், இலங்கையின் தேசிய மட்டத்திலும் தொடரவேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.