கோட்டா மீதான கோபத்தால் அரசைக் கூண்டோடு கவிழ்க்க முயலாதீர்!

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பிரச்சினைகள் இருக்கலாம், கோபங்கள் இருக்கலாம். அதற்காக அவர் தலைமையிலான அரசைக் கூண்டோடு கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம்.”

இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

“நாம் மிகவும் நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றோம். இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது அவசியம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்நிலை ஊடாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

“நாங்கள் பயணிக்கும் கப்பல் திடீரென நடுக்கடலில் வைத்து புயலில் மாட்டிக்கொண்டுள்ளது. நீங்கள் அந்தக் கப்பலின் கப்டனுடன் கோபம் என்றால் உடனே அந்தக் கப்பலை மூழ்கடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் நாமும் நீரில் மூழ்கி இறந்துவிடுவோம். கப்பலில் பயணிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து மெதுவாக அந்தக் கப்பலைப் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவர வேண்டும். அதன் பிறகே கப்டனுடனான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

இது போலவே தற்போது நமது நாட்டிலும் பிரச்சினை உருவெடுத்துள்ளது. ஜனாதிபதியுடன் பிரச்சினைகள் இருக்கலாம், கோபங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றைக் காட்ட வேண்டிய நேரம் இதுவல்ல, இது பழிவாங்கும் நேரம் இல்லை. இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நமது நாட்டை மீட்டெடுக்கப் போராடுவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.