அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! – மஹிந்த பரபரப்புக் கருத்து

“இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தான் பொறுப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்குத் தான் காரணம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச அரசு கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்ச உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பியின் கோரிக்கையும் ஆளும் கட்சிக்குள் பெரும் புயலாக மாறியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று “இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது” என்று கூறி திடீரென தனது பாணியை மாற்றியுள்ளார்.

கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு இன்று வழங்கிய குறுகிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனக்குப் பதவி ஆசை அல்ல. ஆனால், என்னைக் குறிவைத்து சிலர் ஏன் பதவி விலகக் கோருகின்றனர் என்று எனக்குப் புரியவில்லை. எனினும், அவர்களின் குறுகிய கால சுயலாப அரசியல் எனக்குப் புரிகின்றது.

இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. எனினும், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு நான் பொறுப்பு அல்ல. அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்கும் நான் காரணம் அல்ல.

மக்களின் துயரங்களை நான் புரிந்துகொள்கின்றேன். எப்போதும் மக்கள் பக்கமே நான் நிற்பேன். மக்களின் மனநிலையை அறிந்துதான் ஒவ்வொருகட்ட நடவடிக்கையையும் நான் எடுத்து வருகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.