தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்தது என்னால்தான் வெளியே தெரியும் – சீமான்

பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது எனவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான் வெளியவே தெரியும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் போன்றோர் கடந்த 31ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், நேற்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர், விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் அவர்கள் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் வண்டலூர்-மீஞ்சூர் பைபாஸ் சாலையில், மே 18 இன எழுச்சி பொது கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சீமான், தமிழக அரசால் நான் கைது செய்யப்பட்ட போது 6 மாதகாலம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். அதற்கு முன்பு, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் வேலூர் சிறையில்தான் இருந்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா? நான் வேலூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு என் தம்பிகளை மொத்தமாக 3000 பேர்தான் பார்த்திருந்தார்கள்.

ஆனால், நான் சிறையில் இருந்த 6 மாதத்தில் அவர்களை சந்தித்தவர்களின் எண்ணிக்கை 50,000. அதற்கு பிறகுதான் இவர்கள், இவ்வளவு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார்கள் என்பதே வெளியில் தெரியவந்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியப்படுத்தினார். இந்த தீர்ப்பு மற்ற அனைவருக்கும் பொருந்தும், மற்ற 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும். இதற்கு தனியாக போராட்டங்கள் செய்ய வைக்காதீர்கள் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.