மீன், முட்டை, இறைச்சி விலையும் அதிகரிப்பு!

நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எரிபொருள் விலை அதிகரிப்பு, கோழித் தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு முட்டையின் உற்பத்தி செலவு மாத்திரம் 31 ரூபாவாக அதிகரித்துள்ளது. கோழித் தீவன விலை உயர்வால் சிறு கோழி வியாபாரிகள் பலர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.

65 முதல் 70 ரூபா வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கோழித் தீவன உணவுப் பொதியின் விலை 220 ரூபாவாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயரும்போது இது மேலும் அதிகரிக்கும்.

பண்ணையாளர்கள் இந்தத் தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒரு முட்டையை குறைந்தபட்சம் 38 அல்லது 40 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.