ஆயுதத்துடன் வந்தவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல்.

மின்சாரத் தடை நேரத்தில் ஆயுதத்துடன் வந்த சீருடையினர், என்னை விசாரிப்பதாகக் கூறி விரட்டி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம்ராஜன் முறைப்பாடு தெரிவித்துள்ளார்..

கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அசீஸிடம் அவரது முறைப்பாட்டை நேற்றுக் கையளித்தார்.

அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 2ஆம் திகதி இரவு மின்தடை நேரம் பெரிய நீலாவணையிலுள்ள எனது வீட்டுக்கு வந்த ஆயுதம் தரித்த நான்கு இராணுவத்தினரும், தங்களைக் கொழும்பு புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய இருவரும் விசாரிக்க வந்ததாகக் கூறினர்.

கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பிரிவினர் என்பதால் அவர்களிடம் அடையாள அட்டையைக் கேட்டேன். ஆனால், அவர்கள் தர மறுத்தனர் .

நான் கல்முனையில் உண்ணாவிரதமிருந்தமை தொடக்கம் கடந்த மாதம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரை நான் சம்பந்தப்பட்ட விடயங்களில் என்னை துருவித்துருவி விசாரித்தனர்.

இறுதியில் வெளியில் நடமாடக்கூடாது என்று அச்சுறுத்தியதோடு எனக்கும் மனைவி, பிள்ளை மற்றும் மருமகனுக்கும் பயமுறுத்தி அச்சுறுத்தல் விடுத்துச் சென்றனர் .

இதற்கு முன்னும், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போதும், 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள், பொலிஸார், புலனாய்வுக் குழுவினர் எனத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்து என்னை விரட்டினர். தற்போது மீண்டும் இந்த அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் மனித உரிமையுடன் சுதந்திரமாக வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு உதவ முடியாத நிலையில் உள்ளேன்.

சமூக சேவை செய்ய தடை ஏற்பட்டுள்ளது. உளவியல் ரீதியான தாக்கம் அதிகமாக உள்ளது. குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர்.

எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பயப்பீதியுடன் நடைபிணமாகக் குடும்பத்துடன் காலம் கடத்தி வருகின்றேன்.

இது தொடர்பாக எமது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனிடமும் முறையிட்டுள்ளேன். இவர்களை அடையாளம் கண்டு எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.