தனக்கு தானே நெற்றியில் குங்கமிட்டு, தாலி கட்டிக் கொண்ட ஷமா பிந்து… நாட்டின் முதல் Sologamy திருமணம்

தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து பரபரப்பை கிளப்பிய இளம்பெண் ஷமா பிந்து இன்று மணமகன் மற்றும் புரோகிதர் இல்லாமல் திருமணத்தை செய்துகொண்டார். இந்த திருமணத்தை தனது 10 நெருக்கமான நண்பர்களை மட்டுமே நடத்தி முடித்த ஷமா பிந்து, தனது 40 நிமிட திருமணச் சடங்கை டிஜிட்டல் முறையில் மேற்கொண்டார். Sologamy என்றால் தன்னைத் தானே மணம் முடித்துக் கொள்வது. இதன் மூலம் இந்தியாவின் முதல் சோலோகமி திருமணத்தை செய்து கொண்ட பெண்ணாகிறார் இந்த ஷமா பிந்து.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷமா பிந்துவுக்கு வயது 24. இவருக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லையாம். வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வாழ விரும்பாத இவருக்கு மணப் பெண்ணாக இருக்க வேண்டும் என ஆசை உள்ளது.

எனவே இவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அந்த திருமணம் ஜூன் 11ஆம் தேதி நடக்கும் என அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னாள் பல பரபரப்பு கிளம்பியது. சமூகத்தில் இவருக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு மட்டுமல்லாது, இவருக்கு சுய திருமணம் செய்து வைக்க புரோகிதர்கள் யாரும் வரமாட்டோம் எனக் கூறிவிட்டனர். இதனால் கவலை அடைந்த அந்த பெண், தனது திருமணத்தை இரண்டு நாட்கள் நடத்த முன்னரே நடத்த முடிவு செய்து நேற்றே திருமண சடங்குகளை செய்துகொண்டார்.

தனக்கு தானே நெற்றியில் திருமண திலகமிட்ட ஷமா பிந்து, பின்னர் தனக்கு தானே சுயமாக தாலி கட்டிக்கொண்டார். தனது நெருங்கிய நண்பர்கள் சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த திருமணத்தை முடித்துள்ளார் ஷமா. புதுப்பெண்ணாக தனது மகிழ்ச்சி குறித்து அவர் கூறுகையில், ‘எனது விருப்பப்படியே திருமணம் முடிந்ததில் மகிழ்ச்சி, மற்ற பெண்களைப் போல திருமணத்திற்கு பின் நான் வேறு வீட்டிற்கு செல்ல வேண்டியதில்லை. என்னுடைய 10 நண்பர்களை கொண்டு காதும் காதும் வைத்தார் போல இந்த திருமணத்தை முடித்துள்ளேன். இந்த திருமணத்தை கோயில் நடத்த வேண்டும் எனத் தான் நினைத்தேன். ஆனால், யாராவது கலாட்டா செய்து பிரச்சினையாக்கி விடுவார்களோ என பயந்தே இந்த முடிவை மாற்றி திருமண தேதியை முன்கூட்டியே வைத்துக் கொண்டேன்.ஒரு வழியாக திருமணமும் நல்லபடியாக முடிந்தது’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

திருமணம் முடிந்த கையோடு தான் கோவாவிற்கு ஹனிமூன் செல்லவும் திட்டமிட்டுள்ளார் ஷமா. இவரின் இந்த சுயதிருமண அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த வித்தியாசமான துணிச்சலான முடிவுக்கு ஆதரவுகளும் சமூக வலைத்தளத்தில் பெருகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.