இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷனும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 23 ரன்களும், ஸ்ரேயஸ் அய்யர் 36 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் கேப்டன் ரிஷப் பண்ட் 29 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களும் அதிரடியாக குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரிட்டோரியஸ் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக டி காக் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய டூ சென், டேவிட் மில்லர் ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடியில் அதிகபட்சமாக வாண்டர் டூ சென் 46 பந்துகளில் 75 ரன்களும், டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 19.1 பந்துகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.