கள்ளர் கூட்டத்துடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயார் இல்லை! – சஜித் திட்டவட்டம்.

“ஆட்சியைப் பொறுப்பேற்குமாறு சிலர் கேட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது நானோ பொறுப்புகளை ஒருபோதும் தட்டிக்கழிக்கவில்லை. நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற ‘மொட்டு’ கள்ளர் கூட்டம் மற்றும் ராஜபக்‌ஷக்களுடன் இணைந்து அரசை அமைக்க முடியாது என்றே அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கூறி வருகின்றோம்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் மேலும் கூறுகையில்,

“இன்று இந்நாட்டு மக்களுக்கு இந்த அரசு மீது ஒரு துளியளவும் நம்பிக்கை இல்லை. இவ்வாறான குழுக்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதன் மூலம் இந்த நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும்?

இந்த நாடு தொடர்ந்தும் மூடிய தன்மையுள்ள ஒரு நாடாக இருக்க முடியாது. உலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணும், உலக நாடுகளுக்கு நமது நாட்டை அனுகுவதற்கு ஏற்ற திறந்த தன்மை மற்றும் உலக நாடுகளுடன் நட்புறவுகளைப் பேணும் நாடாக மாற வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.