அதிமுக பொதுக்குழு கூட்டம் பரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது – 2000 போலீசார் குவிப்பு

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படம் பதித்து பேனர் வைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைந்து பூங்கொத்துக்கள் கொடுக்கும் படத்தை கொண்டுள்ள பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் சுமார் 2,665 பேர் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் அரங்குகள், பேனர்கள், முகப்பு அலங்காரங்கள், செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க வானகரத்தில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை கட்டாயம் கொண்டு வரவேண்டு என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் வரைவை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர். மேலும், கட்சியின் வரவு, செலவு கணக்குகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்ன. தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஓபிஎஸ் இவற்றை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் கொண்டு வர கூடாது என்ற நிபந்தனையும் விதித்துள்ளார்.

தீர்மானங்களில், பொதுச் செயலாளர் குறித்த தீர்மானம் இல்லாததால், கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிறைவேற்றிய பிறகு, ஒற்றைத் தலைமை குறித்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வர ஈபிஎஸ தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.