அக்னிபத் திட்டத்தின் பாதிப்பு போர் வந்தால்தான் தெரியும்: ராகுல் காந்தி

ராணுவத்தில் தற்காலிக அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் பாதிப்பு போர் வந்தால்தான் தெரியும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் 5 நாட்களில் 50 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. இதை தொடர்ந்து நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது, அங்கு இருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசிய ராகுல் காந்தி, அமலாக்கத் துறை மூலம் நடத்தப்படும் தொடர் விசாரணை என்னை பாதிக்காது. காங்கிரஸ் தலைவர்களை அச்சம் கொள்ளவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாது செய்ய முடியாது என்பது என்னிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கும் தெரியும். காங்கிரஸ் தலைவர்கள் பயப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. கடைசி வாய்ப்பாக ராணுவ வேலைவாய்ப்பும் மூடப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய பணிகளில் சேர வேண்டும் என்று கனவோடு தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த இளைஞர்களின் கனவை மத்திய அரசு உடைத்துள்ளது. அக்னிபத் திட்டத்தின் பாதிப்புகளை போர் வரும்போது பார்க்கலாம்.

நாட்டின் ராணுவ பலத்தை பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போன்று அக்னிபத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற வேண்டும். உண்மையான நாட்டுப்பற்று என்பது நாட்டை பலப்படுத்துவதுதான் என்பதை இளம் இந்தியா அறியும்’ என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.