எரிபொருள் இருப்பு இல்லை; முற்றாக முடங்கும் இலங்கை?

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்குத் தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதழ் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் தற்போது ஆயிரத்து 100 தொன் பெற்றோல் மற்றும் 7 ஆயிரத்து 500 தொன் டீசல் மட்டுமே உள்ளன எனக் கூறப்படுகின்றது.

இலங்கை கடனைச் செலுத்தத் தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளன எனவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கிகளின் உத்தரவாதத்தை அவை கோருகின்றன எனவும் கூறப்படுகின்றது.

கடந்த ஒரு வாரமாக நாட்டுக்கு எரிபொருள் கப்பல்கள் எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் கப்பல்
வரவில்லையென்றால், பொதுப் போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக முடங்கிவிடும் எனவும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள குறைந்தளவான எரிபொருள்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன எனவும், பொதுமக்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்ற விடயம் எனவும், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க முடியாததால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.