யாழில் சிறுமி கடத்தல்: 2 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார் என்று உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டார் என்று உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று குறித்த சிறுமி கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கிளிநொச்சிப் பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, தமது முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், தமது பகுதிக்கு அண்மையில் வசிக்கும் இளைஞர் குழுவால் தமக்குத் தொடர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன எனவும், அது தொடர்பிலும் பொலிஸாருக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை எனவும் சிறுமியின் உறவினர்கள் வடக்கு மாகாண ஆளூநர் அலுவலகத்தில் முறையிட்டிருந்தனர்.

அதையடுத்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ். பொலிஸார் சிறுமியின் உறவினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களைக் கைதுசெய்து யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.