பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமைக்கும் வரி.. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்

பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் வங்கிக் காசோலை ஆகியவற்றிற்கும் வரி விதிக்க, ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி அமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடி முடிவெடுக்கும். அந்த வகையில் 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று தொடங்கியது.

அதில், அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில், சில பொருட்கள் மீதான வரி விகிதத்தை மாற்றி அமைப்பது, சில பொருட்களுக்கான வரி விலக்கை ரத்துசெய்வது, ஆகியவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஓட்டல் அறை வாடகை உள்ளிட்ட சேவைகளுக்கான வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு 12 சதவிகிதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட மருத்துவமனை அறை வாடகைக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. அஞ்சல் அட்டை, உள்நாட்டு கடிதம், புக் போஸ்ட் ஆகியவற்றை தவிர, அனைத்து அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காசோலைகளுக்கு 18 சதவிகிதமும், பாக்கெட்டில் அடைத்து லேபிள் ஒட்டி விற்கப்படும் தயிர், லஸ்சி, பொறி, அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்டவற்றுக்கு 5 சதவிகிதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. மேலும், பிற வரி விதிப்புகளை மாற்றுவது தொடர்பாக மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதை நீட்டிப்பது குறித்து, இன்றைய கூட்டத்தின் போது ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.