IMF பேச்சுகள் சாதக நிலை!

பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுகள் சாதகமான நிலையை அடைந்துள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

சபையில் விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்த அவர், 2023ஆம் ஆண்டு, நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தார்.

2023ஆம் ஆண்டு பல சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளுடன் பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், 2024ஆம் ஆண்டு இறுதிக்குள், பணம் அச்சிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் எனவும் கூறினார்.

இந்தநிலையில், பொருளாதார மீளமைப்புக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்து நடத்தப்பட்ட பேச்சுகளாக இருந்தன.

எனினும், தற்போது வங்குரோத்து நாடாக இருந்து பேச்சு நடத்தப்படுகின்றது. இந்தநிலையில் கடன் மீளமைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை என்பவற்றை சர்வதேச நாணய நிதியத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்தே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் திட்டத்துக்குச் செல்லமுடியும்.

நமது தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்மறை நான்கு மற்றும் எதிர்மறை ஐந்து இடையே உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிவரங்களின்படி, எதிர்மறை ஆறு மற்றும் எதிர்மறை ஏழு இடையே உள்ளது. இது ஒரு தீவிரமான நிலை. இந்தச் சாலை வரைபடத்தில் உறுதியான பயணத்தை மேற்கொண்டால், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்ட முடியும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முதன்மையான பிரச்சினை எரிபொருள் நெருக்கடி. அதே சமயம், உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் உணவு விடயத்தில், நம் நாடு ஒரு கட்டத்தில் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது.

சமீபகால உலக நெருக்கடிகளால் இந்நிலை மேலும் தீவிரமடைந்து நாங்கள் அடுப்பில் விழுந்தோம். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது. இப்போது நடந்திருப்பது நமது நெருக்கடியின் மேல் ஒரு சர்வதேச நெருக்கடியைச் சேர்த்ததுதான். இந்த நிலை நமக்கு மட்டும் அல்ல. இது மற்ற நாடுகளையும் பாதிக்கின்றது. இந்த உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் எங்களுக்கு வழங்கிய கடன் உதவியை இந்தியா மட்டுப்படுத்த வேண்டியுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.