இந்தியாவில் 19 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு.. தமிழகம், மே.வங்கத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகம்..

இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தின் தினசரி பாதிப்பு 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 18,930 ஆக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,66,739ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 457ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,245ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 35 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,25,305ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் தினசரி டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்று 4.32 சதவீதமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 38 ஆயிரத்து ஐந்து பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 2,352 பேருக்கு கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், தினசரி பாசிடிவிட்டி ரேட் 16.24 சதவீதமாக உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 14,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டிலும், 2,743 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவான நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,717ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் போலவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.

நாட்டில் சிறார்கள் மற்றும் வயது வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டப்பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரே நாளில் 11,44,489 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 198.33 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளியை 9 மாதத்தில் இருந்து 6 மாதமாக சுகாதாரத்துறை குறைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.