“கோட்டா உடன் வீட்டுக்குப் போ” சனி நாடெங்கும் ஆர்ப்பாட்டம்!

“கோட்டா உடன் வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றிவளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருக்களுக்கு வந்து அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள், காலிமுகப் போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்துகொண்ட மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது:-

“நாடெங்கும் நாளை மறுதினம் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி முழுமையாக பங்கு பெறும். இதன்படி மலையகத் தோட்டங்களில் அன்றைய தினம் பணிகளில் ஈடுபடாமல், அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட வதிவாளர்களைத் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் கோருகின்றோம்.

அதேபோல் கொழும்பு உட்பட நகரங்களில் வர்த்தக நிலையங்களையும், அலுவலகங்களையும் மூடி, முழுமையாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படியும், தமது வேலைத்தள பணியாளர்களையும் அரச எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொள்ள இடமளிக்கும்படியும் அனைத்துத் தரப்பினரையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் கோருகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.