முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு… அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – இபிஎஸ் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு, அவரது நண்பர்கள் வீடு என 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாததால் தமிழக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ரெய்டு நடத்துவதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு, அவர்களது நண்பர்கள் வீடு என 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரேஷன் கடைகளுக்கு பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கடந்த அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்த புகாரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 44 லட்ச ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

2015 முதல் 2021 வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதுடன், பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது பெயரிலும், குடும்பம் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் சொத்துகளை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த ரெய்டுக்கு எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் கண்டம் தெரிவித்துள்ளர். அந்த கண்டன பதிவில், “அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த வீடியா அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.