ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் விளைவித்த மூன்று பேர் வாள்கள், பொல்லுகளுடன் கைது!

வவுனியா, ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வீதியில் நீண்ட வரிசையில் பல நாட்களாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு இளைஞர் குழுவினர் புதிதாக ஒரு புதிய வரிசையை ஏற்படுத்தியதுடன், இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டபோது தங்கள் வரிசையினருக்கே எரிபொருளை முதலில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்து சண்டையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவரைக் கைதுசெய்துள்ளதுடன், காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் பொல்லுகளையும் மீட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.