அதிமுக அலுவலகத்திற்கு சீல்.. ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நேற்று, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 நபர்களும் , மற்றொரு தரப்பில் 20 நபர்களும் காயமடைந்தனர். மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 நபர்களும், ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர் ,ருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு , கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உண்மையான அதிமுக தாங்கள் தான் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்களது மனுவில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அவசர முறையீடு செய்தார். மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி அனுமதி அளித்தார்.

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார்.

இதைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார். அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.