மஹிந்த, பஸில் இன்னமும் நாட்டைவிட்டு ஓடவில்லை.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் என அவர்கள் சார்பில் இன்று முன்னிலையான சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின், முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஸ்மன் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல உள்ளிட்டோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி நேற்றுமுன்தினம் உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கையின் நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் ஜெஹான் கனக ரட்ணம் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கமைய இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்துக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரினர்.

சட்டத்தரணி உபேந்திர குணசேகரவின் ஊடாக இந்தப் பிரேரணையை தாக்கல் செய்த மனுதாரர்கள், இந்த விவகாரத்தில் அவசரம் உள்ளதால், இந்த மனுவை ஜூலை 14 ஆம் திகதி (இன்று) விசாரணைக்கு எடுக்கக் கோரினர்.

முன்னதாக குறித்த அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதிவரை ஒத்திவைத்து கடந்த ஜூலை 6ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கண்ட பிரதிவாதிகளில் சிலர் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், அதன் முறையான விசாரணை தடைப்படலாம் என்றும் நம்பத்தகுந்த முறையில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மனுதாரர்கள் முன்கூட்டியே மனுவை விசாரணைக்கு எடுக்க நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்வதாகத் தெரிவித்தனர்.

இதன்படி, இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணை நாளை இடம்பெறவுள்ளது என உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், நாளை வரை நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல ஆகிய மூவரும் தமது சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றத்துக்கு உறுதியளித்தனர்.

இதேவேளை, தனக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டியமைக்கான தேவை இல்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.