வாக்குச்சீட்டைப் படம் எடுத்தால் 7 வருடங்கள் சபைக்கு வரத் தடை எம்.பிக்களுக்குச் சபாநாயகர் எச்சரிக்கை.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குச்சீட்டுக்களைப் படம் எடுக்கக் கூடாது. இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ அல்லது செல்வாக்குச் செலுத்தவோ கூடாது.”

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்ற அலுவலகத்துக்கு அறிவித்துள்ளார்.

எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை நிரூபிப்பதற்காக இன்று வாக்குச்சீட்டைப் படம் எடுக்குமாறு சில கட்சித் தலைவர்கள் தங்கள் எம்.பிக்களுக்கு அறிவித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகின.

நாடாளுமன்ற அலுவல்கள் சபைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,

“ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 20 ஆவது பிரிவின்படி 1981ஆம் ஆண்டின் 02 இலக்க சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பிக்களைச் செல்வாக்கு செலுத்துவது அல்லது வற்புறுத்துவது வாக்களிப்பு தொடர்பான விதிகளை மீறுவதாக அமையும். இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு என்பதால், எம்.பி. ஒருவரின் வாக்குச்சீட்டைப் புகைப்படம் எடுக்கக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் நாடாளுமன்ற அமர்வுக்குத் தடை விதிக்கப்படும்” – என்று பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.