இராணுவத்தினரைக் கைது செய்ய ஐ.நா. ஆணையாளர் கோர முடியாது – கொந்தளிக்கின்றார் பீரிஸ்.

“இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.”

இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பில் எமது செய்தியாளர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வலியுறுத்தல் இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாகும். இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தும் நடவடிக்கையை ஐ.நா. உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஐ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் இலங்கை இராணுவ அதிகாரிகளைக் கைதுசெய்யுமாறு கோரவோ அல்லது பயணத்தடை விதிக்குமாறு கோரவோ மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணையாளரின் இந்த அறிவிப்புக்கு எதிராக அரசு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்” – என்றார்.
………

Leave A Reply

Your email address will not be published.