2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புவிக் கண்காணிப்பிற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02, ஆசாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணி நேர கவுன்டவுன் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு செயற்கைக்கோள்களும் காலை 9.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதேபோன்று 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இஓஎஸ்-02, ஆசாதிசாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து முன்னரே செயற்கைக்கோள்கள் வெளியேறியதால் நிலைநிறுத்த முடியவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

செயற்கைக்கோள்கள் வட்டப்பாதைக்கு பதில் நீள் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.