நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்

கர்நாடகா மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் ஹசான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிவகுமார் சைத்ரா தம்பதி. இவர்களுக்குள் அண்மை காலமாக பிணக்கு ஏற்பட்டு, விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஹோலேனா ராசிபுரா என்ற உள்ளூர் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். விவாகரத்து தொடர்பாக விசாரித்து இருவருக்கும் நீதிபதி கவுன்சலிங் வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கவுன்சில்ங் போது இருவரும் பிரச்சனையை பேசி தீர்த்து இணைந்து வாழப்போவதாக முடிவெடுத்துள்ளனர்.

தொடர்ந்து கவுன்சிலிங் அறையை விட்டு இருவரும் ஒன்றாக வெளியே வந்துள்ளனர். மனைவி சைத்ரா கழிப்பறை வரை சென்று வருகிறேன் எனக் கூறி நகர்ந்து நடந்துள்ள நிலையில், திடீரென கணவர் சிவகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

சிவகுமாரின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த மனைவி சைத்ராவை தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அத்தோடு நிற்காமல், இருவரின் குழந்தையையும் சிவகுமார் தாக்க முற்பட்டுள்ளார். அதற்குள்ள சிவகுமாரை பிடித்து குழந்தையையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.சிவகுமாரை பிடித்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூத்த காவலர் ஹரிராம் சங்கர் கூறுகையில், “நீதிமன்ற வளாகத்தில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி, அந்த நபரை காவலில் எடுத்துள்ளோம். இவர் மீது திட்டமிட்ட கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.