அதிமுகவில் பழைய நிலையே நீடிக்கும்.. ஓபிஎஸ் -இபிஎஸ் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் , அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆகஸ்டு 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் விசாரிக்கபட்டது.

பொதுக்குழு குறித்து ஜூன் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியானதால், தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஈபிஎஸ் தரப்பு, 2017ம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது , என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் கூறியது இரண்டாயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக, கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவிகள் காலாவதியாகிவிடும் என எந்த தீர்மானத்திலும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஜெயந்திரன் வழங்கிய தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.