‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்..!’ – ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் அழைப்பு

அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது “ அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு நன்றி. எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது , அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் , எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை.

சிறிய சிறிய பிரச்சனை , எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது. அதிமுக எம்ஜிஆரால் தொண்டர்களால் , தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்டது, எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை அவரை யாரும் வெல்ல முடியவில்லை.

எம்ஜிஆர் மறையும்போது இருந்த 17லட்சம் உறுப்பினர்களை , ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட தொண்டர் இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். 16 ஆண்டு முதல்வராக இந்தியாவின் சிறந்த மாநிலமாக வைத்திருந்தார். நான்கரை ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடியுடன் பயணித்தோம். மீண்டும் அந்த நிலை வரவேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்கை.

தர்மயுத்தத்தின் பிறகு கூட்டுத் தலைமைப்படி , குறையே இல்லாமல் இருவரும் இணைந்து பயணித்தோம்.அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.