மாணவ தலைவர்கள் பயங்கரவாதிகளா? உடனடியாக விடுக்கவேண்டும் – அரசிடம் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

“பயங்கரவாதம் எனச் சொல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை மூன்று மாதங்களுக்குத் தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான யோசனை மிகவும் வருந்தத்தக்கது. இது குறித்து அரசு சர்வதேச சமூகத்துக்குப் பதில் சொல்ல வேண்டி வரும். எனவே, மாணவர் தலைவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்துவைத்து விசாரிக்கப்படுவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை கட்டளை ஒன்றைப் பெற்று மூன்று மாதங்கள் தடுத்து வைத்திருப்பதற்குத் தாங்கள் கோரியிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம். கடந்த ஆட்சிக்காலத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி வேறொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரசு முயற்சி எடுத்திருந்தது.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் மோசமானது. அது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு பூராகவும் போராட்டம் நடத்தி வருகின்றோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுகின்ற வரை அதனை உபயோகிக்கமாட்டோம் என வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில்தான் திடீரென மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உபயோகிக்கின்றார்கள்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டனர். 16 பேருக்குப் பிணை வழங்கப்பட்டபோதும் இவர்களுக்கு மட்டும் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவு பிரயோகிக்கப்படுகின்றது.

காலாவதியாகி இருக்க வேண்டிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றபோதும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உபயோகிக்க ஆரம்பிப்பது மிகவும் மோசமான அடிப்படையாக நாங்கள் கருதுகின்றோம்.

பயங்கரவாதச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் ஜனநாயக வழியில் போராடுவது அவர்களுக்கான உரிமை. அதற்காக அவர்களுக்குத் தண்டனை கூட வழங்க முடியாது. ஆனால், அதனைப் பயங்கரவாதம் எனச் சொல்லி மாணவர் தலைவர்களை மூன்று மாதங்களுக்குத் தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான இந்த யோசனை மிகவும் வருந்தத்தக்கது. இது தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டி வரும்.

மாணவர் தலைவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.