வருமானம் இல்லாததால் 11 மாத குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூர தந்தை..

பொருளாதார நெருக்கடி காரணமாக தனது 11 மாத குழந்தையை கால்வாயில் தூக்கி வீசி தந்தையே கொலை செய்த கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள சன்சோரே பகுதியில் வசிப்பவர் முகேஷ் பேர்வால். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான முகேஷ் ராஜஸ்தானில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்துவருகிறார். உஷா என்ற மாற்று சமூக பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி உஷாவுக்கும் சமீபதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்து 11 மாதமே ஆன நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று குழந்தையை முகேஷ் தனது தந்தை வீட்டில் விட்டு வருகிறேன் என மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தந்தை அனுமதிக்க மாட்டார் எனக் கூறி மனைவி உஷாவை அங்கு வர வேண்டாம் என முகேஷ் தடுத்துள்ளார். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து முகேஷ் வீடு திரும்பிய நிலையில், குழந்தை தந்தை வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையில் முகேஷ் வீட்டின் அருகே உள்ள நர்மதா நதி ஓடும் கால்வாயில் குழந்தையை வீசி கொலை செய்துள்ளார். இவரின் செயலை அப்பகுதியை சேர்ந்தவர் பார்த்து பதறிப்போய் காவல்துறையிடம் தெரிவித்த நிலையில்,காவல்துறை முகேஷை கைது செய்துள்ளது.

கைதான முகேஷ் காவல்துறையிடம் தெரிவித்த வாக்குமூலத்தில், முகேஷுக்கு வேலை மூலம் மிகக் குறைந்த வருமானமே வந்துள்ள நிலையில், குழந்தையை நல்ல முறையில் வளர்க்க முடியாது என பயந்து குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து கால்வாயில் தூக்கி வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். இதைத் தொடர்ந்து கால்வாயில் இருந்து குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிய காவல்துறை கைதான முகேஷை சிறையில் அடைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.