கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி இணக்கம் என்கிறார் டக்ளஸ்.

கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பைக் கடற்றொழிலாளர்கள் சமாளிக்கும் வகையில் நிவாரணம் வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார் எனவும் கூறினார்.

ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், தமது தொழில் செயற்பாடுகளுக்குத் தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசல் போன்றவை தாராளமாகக் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மண்ணெண்ணெயின் விலையேற்றம் தொடர்பிலும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டதுடன், ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை, குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அவை தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.