மன்னிப்பு கோரிய ரஞ்சனுக்கு நாளை அல்லது திங்கட்கிழமை விடுதலை?

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (25) நீதிமன்றில் சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பித்து மன்னிப்புக் கோரினார்.

நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான முதலாவது வழக்கு தொடர்பாகவும், இரண்டாவது வழக்கு தொடர்பாகவும் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோருவதாக வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், அந்த அறிக்கையால் தலைமை நீதிபதி மற்றும் சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் கூறிய கருத்துக்கள் பொய்யானவை எனவும், அந்த அறிக்கைகளை வாபஸ் பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான அறிக்கைகளை வெளியிடப் போவதில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

12 ஜனவரி 2021 அன்று, 21 ஆகஸ்ட் 2017 அன்று அலரி மாளிகக்கு வெளியே வெளியிட்ட அறிக்கைக்காக முதல் வழக்கைத் தாக்கல் செய்த பின்னர் உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் அறிக்கையை வாபஸ் பெற மாட்டோம் என நீதிமன்றத்தில் தெரிவித்தது தொடர்பாக இரண்டாவது வழக்கு தொடரப்பட்டது.

சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.