ராஜபக்ச குடும்பத்தின் சாபக்கேடான ஆட்சிக்கு இனியும் இடமளியாதீர்கள்! – சஜித் வேண்டுகோள்.

“ராஜபக்ச கள்வர் குடும்பத்தினர் வேண்டுமென்றே இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கி நாட்டை ஏழ்மைக்கு ஆளாக்கிக் கொள்கை ஒன்றும் இல்லாதவாறு செயற்பட்டது. அவர்கள் இப்போதும் நாட்டின் அடுத்த ஆட்சியைத் தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கி நாட்டை அறுதியாக்கி ராஜபக்ச ஆட்சியில் கீழ் கொண்டுவரும் நோக்குடன் செயற்படுகின்றனர். இந்தச் சாபக்கேடான ஆட்சிக்கு இனியும் எவரும் இடமளிக்கக்கூடாது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

களுத்துறை, வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேச மீனவ மக்களை இன்று (25) சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்ச குடும்பத்தின் சாபக்கேடான ஆட்சியில் கோடீஸ்வரர்களுக்கு பெரும் வரிச்சலுகைகளை வழங்கி விவசாயிகளின் விவசாய உரிமைகளை இழக்கச் செய்து, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பரிதாபகரமான தலைவிதியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி, வீரம், மனிதாபிமானம் என்ற பொய்யான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று, தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டையே அழித்தார். இதன் பின்னர் இரண்டரை வருடங்களின் பின்னர் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் நாட்டுக்கு மனித நேயம் கொண்ட மக்கள் பிரச்சினைகளை புரிந்துகொண்ட ஆட்சியொன்று தேவை எனக் கூறினாலும் தற்போதைய ஆட்சியாளர்கள் அவ்வாறான மக்கள் விருப்பத்தை வழங்கவில்லை.

போலியான வீரத்தை விட மனிதாபிமானத்தை தேர்ந்தெடுக்கும் காலம் வந்துள்ளது. தங்கி வாழும் மனநிலையை விட்டு வெளியேறி அனைவருக்கும் சிறந்ததான ஆட்சியொன்றைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்கு நானும் நான் சார்ந்தவர்களும் தயாராக இருக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.