பாலியல் அத்துமீறல்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என மிரட்டிய போலி டாக்டர்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனது குழந்தைக்காகச் சிகிச்சைக்கு வந்த 38 வயது பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலி மருத்துவர் ராபின்சன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொந்தரவு குறித்து வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று ராபின்சன் இளம் பெண்ணை மிரட்டி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் ராபின்சன். இவர் சித்த மருத்துவத்தில் பயிற்சி பெற்றவர். விளாத்திகுளத்தில் ‘பத்மநாபன் ஆஸ்பத்திரி” எனும் பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 23வயது இளம்பெண் ஒருவர் தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நேற்று மதியம் சென்றுள்ளார்.

அப்போது அந்த இளம் பெண்ணுக்கு மருத்துவர் ராபின்சன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் நடந்தவற்றை பெண்மணி தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ராபின்சன் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் 506(ii) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டு உள்ள ராபின்சன் சித்த மருத்துவ முறையில் பயிற்சி பெற்று விட்டு, ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்த காரணத்திற்காகக் கடந்த 2015 ஆம் ஆண்டு போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்டு அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.