கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரியில் தீவிபத்து – வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!

ஆந்திரபிரதேச மாநிலம் கர்னூல் – பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரியில் தீவிபத்து ஏற்பட்டு சிலிண்டர்கள் வெடித்து சிதறின. டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் குதித்து தப்பி ஓடிய நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஆந்திரபிரதேச மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டத்தில் உள்ள உளவுபாடு பகுதிக்கு லாரி ஒன்று 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்றது. இந்நிலையில் இரவு 12 மணியளவில் பெத்தவாடா, கர்னூல் – பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில், லாரியின் பின் பகுதியில் தீப்பொறிகள் கிளம்பியுள்ளது. இதனை கண்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.

லாரியில் பிடித்த தீ கேஸ் சிலிண்டர்களுக்கும் பரவி அதிக சத்தத்துடன் கேஸ் சிலண்டர்கள் வெடித்து சிதறியது. இதனை கண்ட வாகன ஓட்டிகள், அவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கேஸ் சிலண்டர்கள் வெடித்து சிதறியதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீ பரவியது, தீயணைப்பு துறையினர் லாரியை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. லாரி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மேலும் சிலிண்டர்கள் வெடித்து சாலையில் சிதறிக் கிடந்தன. பெரும்போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், அங்கிருந்த லாரி மற்றும் வெடித்து சிதறிய சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், அந்த தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.