அர்ஸ்தீப் சிங் கேட்ச் விட்டது கூட பரவாயில்ல… ஆனா இந்த இரண்டு பேர் தான் எல்லாத்துக்கும் காரணம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா விமர்சித்து பேசியுள்ளார்.

சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்களும், கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா தலா 28 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாதப் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதன்பின் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஃப்கர் ஜமான் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார். நீண்ட நேரம் தாக்குபிடித்து வழக்கம் போல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 51 பந்தில் 71 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் வந்த குஷ்தில் ஷா 11 பந்தில் 14 ரன்களும், 8 பந்தில் 16 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் பரபரப்பான போட்டியில் 19.5 ஓவரில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணியுடனான இந்த தோல்வி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இக்கட்டான நேரத்தில் தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட்டை விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “பாகிஸ்தான் அணியிலும் மிக சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்த போட்டியில் எங்களை விட பாகிஸ்தான் அணி மிக சிறப்பாக விளையாடியது. பாகிஸ்தான் அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது. விராட் கோலி எடுத்து கொடுத்த ரன்கள் எங்களுக்கு முக்கியமானதாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்தது தான் போட்டியில் திருப்புமுனை. அனைத்து வீரர்களும் தங்களது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.