ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர்4 சுற்றில் இந்தியா இலங்கை இன்று மோதல்.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர்4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது. இதில் இந்திய அணி 181 ரன்கள் குவித்த போதிலும் பாகிஸ்தான் ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை அடைந்து விட்டது. இந்த தோல்வியால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

இந்த நிலையில் இந்திய அணி துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.