நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீருவோம்! – ஜெனிவாவில் நீதி அமைச்சர் உறுதி.

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஓர் ஒழுங்குமுறையில் தீர்வுகளைக் காணும் பணியை எமது அரசு முன்னெடுக்கும் என்றும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிலான அரசு, இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீரும் என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உறுதியளித்தார்.

ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரச குழுவிலுள்ள முக்கியஸ்தரான நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:-

“சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நல்ல தீர்வு முன்வைக்கப்படும். அந்தக் கைதிகளில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்.

காணி விடயம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கும் தீர்வுகள் முன்வைக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி நடத்திய பேச்சின்போது இதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் புலம்பெயர் தமிழ் மக்களுடன் இலங்கை அரசு நெருக்கமாகச் செயற்பட முடியாது என்று தெரிவிக்கப்படும் கருத்துடன் நான் உடன்படுகின்றேன்.

இலங்கை மீண்டெழ புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளும், ஒத்துழைப்புக்களும் கட்டாயம் தேவை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.