ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை அறிவித்தது ஐசிசி..

சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தார்.

துபாய், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயர்களை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது. சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், பெத் மூனி மற்றும் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். ரசிகர்களின் வாக்களிப்பின் அடிப்படியில் இதன் வெற்றியாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐசிசியின் மாதாந்திர சிறந்த வீரர் வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.