அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் சிற்றுண்டியை உண்டார்.

தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது, மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலினும் காலை சிற்றுண்டியை உண்டார். மேலும், அருகில் இருந்த மாணவ-மாணவியருக்கு அவர் சிற்றுண்டியை ஊட்டிவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.